tamilnadu

img

இந்தியா - சீனா மோதல்

சீனாவுடன் நம்முடைய நீண்டகால ராணுவ உத்தி சார்ந்த அணுகுமுறை மறுகட்டமைப்பு செய்யப்படுவது தேவை. நமது நலன்கள் சிறந்தமுறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா நினைத்தால், அது அமெரிக்க-சீன மோதலில் அணிசேரா நிலைப்பாட்டையே (non-aligned posture) பின்பற்றிட வேண்டும்.

கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்திய - சீனத் துருப்புக்களிடையே நடந்த மோதலில், இந்திய ராணுவத்தின் 16வது  பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த கமாண்டிங் அதிகாரி ஒருவர் உட்பட 20  வீரர்கள் கொல்லப்பட்டிருக்கி றார்கள். இது  புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இந்தியா வில் மக்களிடையே  ஆவேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஜூன் 6 அன்று மூத்த ராணுவ கமாண்டர்கள் இடையே சந்திப்பு நடைபெற்று, ‘அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள எல்லையின் கோட்டுப் பகுதியில்’ (Line of actual control)பல்வேறு இடங்களில் பரஸ்பரம் பதற்றநிலையைத் தவிர்த்து, பின்வாங்குவது என்று ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டபின்னர், இவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இந்நிகழ்வு அதிர்ச்சியளிக்கக் கூடியதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.  ஜூன் 15 அன்று இரவு இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கிடையே நேரடியாக மோதல்கள் நடைபெற்றதற்கான சூழ்நிலைகள் என்ன என்பது பற்றியும் இதுவரை எதுவும் தெரியவில்லை. அர சாங்கம், விஷயங்களைத் தெளிவுபடுத்திட எதுவும் செய்ய வில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு

ஜூன் 19 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நாடு இந்த நிலைமையை எதிர்கொள்ள ஒன்று பட்டு நிற்கிறது என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்கள். ஆனால், லடாக்கில் ‘கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கோடு பகுதியில்’ சீன மற்றும் இந்தியத் துருப்புக்களிடையே இருந்துவந்த நிலைப் பாடுகளின் நிகழ்வுகள் குறித்தும், நாம் எப்படி எதிர் கொண்டோம் என்பது குறித்தும் எதுவும் கேட்கக் கூடாது என்பது இதன் பொருள் அல்ல. இவை அனைத்தும் முறை யாக மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியது தேவை. அதுமட்டும்தான், அரசாங் கத்திற்கும், நாட்டுக்கும் முன்னேறிச் செல்வதற்கான வழியைக் காண உதவிடும்.  இந்திய - சீன அயல்துறை அமைச்சர்கள் ஜூன் 17 அன்று தொலைபேசி வாயிலாகப் பேசியிருக்கிறார்கள். இருதரப்பினரும் தங்கள் நிலைப் பாடுகளை மீண்டும் வலியுறுத்தியபின்னர், அவர்கள் முடிவாக, “ஒட்டுமொத்த நிலைமை பொறுப்புணர்வுடன் கையாளப்படும்” என்றும், “இரு தரப்பினருமே ஜூன் 6 அன்று செய்துகொண்ட புரிந்துணர்வின்படி பரஸ்பரம் பின்வாங்குதல் அமல்படுத்தப்படும்” என்றும் கூறியிருக்கி றார்கள். மேலும்  “இரு தரப்பினரும் விஷயங்களைப் பெரிது படுத்திடக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; அதற்குப் பதிலாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறை களின் அடிப்படையில் அமைதி திரும்ப உத்தரவாதப் படுத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்கள்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த அணுகுமுறை யைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரித்தது.

முதிர்ச்சியோடு அணுக வேண்டும்

இந்தப் பின்னணியில், பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றும், ராணுவரீதியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வெறிக் கூச்சல் போடுவது முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவைகளாகும். கூருணர்வுமிக்க எவ ரொருவரும், அவரது அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், இதுமாதிரியான எதார்த்தமற்ற மற்றும் முதிர்ச்சியற்ற முறையில் கருத்துக்களை உதிர்த்திட மாட்டார்கள். 

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், எல்லைப் பகுதியில்  அமைதியை நிலைநாட்டுவதற்காக சீனாவுடன் செய்துகொண்டுள்ள முந்தைய ஒப்பந்தங்கள் அனைத்தும் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன என்று கூறு கிறார்கள். இந்தியா - சீனா எல்லைப் பகுதிகளில் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியின் எல்லைக் கோட்டையொட்டி அமைதியை நிலைநாட்டுவதற்காக 1993இல் தொடங்கி, எல்லைப் பிரச்சனைகளை மேலாண்மை செய்திட தொடர்ந்து பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.   1996, 2005, 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வில் ஆட்சி புரிந்த அரசாங்கங்களின் கீழ் மேலும் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களைப் போட்ட சமயத்தில் காங்கிரசும் ஆட்சியிலிருந்திருக்கிறது, பாஜகவும் ஆட்சியிலிருந்திருக்கிறது. இமயமலையின் உச்சியில் அமைதியை நிலைநாட்ட, இந்த ஒப்பந்தங்க ளும், இவற்றின்கீழ் அமைக்கப்பட்ட நடைமுறைகளும் அவ்வப்போது எழுந்த வித்தியாசங்கள் மற்றும் மோதல்க ளைக் கையாள்வதற்கு உதவின. இதற்கு முன் கடைசியாக ஆயுத மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் என்பது, 45 ஆண்டு களுக்கு முன், 1975ல் நடந்துள்ளது. இம்முயற்சிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இப்போது தள்ளுபடி செய்வதென்பது தவறாகும். மாறாக, கடந்த கால ஒப்பந் தங்களின்மீது ஒரு புதிய கட்டுக்கோப்பான வரையறையை கட்டி எழுப்புவதென்பதே இப்போதைய தேவையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக  சீனா ஆக்கிரமிக்கிறது

முன்னேறிச் செல்வதற்கான வழிகள் இரண்டு விதங்க ளாகும். முதலாவதாக, இன்றுள்ள நிலைமைகளின் பின்னணியில் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது, எல்லைக்கோட்டுப் பகுதிகள் அனைத்திலும், பதற்றத்தைத் தணித்திடவும், பரஸ்பரம் பின்வாங்குவதற்குத் தேவையான உத்திகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். இது தொடர்பாக, ஜூன் 22 அன்று மால்டோ (Moldo)வில் நடைபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான கூட்டம், இந்தத் திசைவழியில் ஓரடி முன்னே எடுத்து வைத்திருக்கிறது.  ஆனால், ராணுவ அதிகாரி கள் மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் மட்டும் போதாது. ராஜீய ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பேச்சுவார்த்தைக ளைத் தொடங்கிடவும் உயர்மட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  எனினும், இதற்கு மிகவும் தெளிவானதொரு நீண்டகால அடிப்படையிலான உத்தியு டன் கூடிய அணுகுமுறை (a clear-cut strategic approach) தேவை.  லடாக்கில் இப்போதுள்ள நிலைப்பாடு என்பதை, சீனா, கொஞ்சம் கொஞ்சமாக அதேவேளை தொடர்ச்சியாக முன்னேறி ஆக்கிரமிப்பது  ‘ salami-slice’ tactics - என்ற உத்தியைப் பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் கணிச மான அளவிற்கு முன்னேறியிருப்பதாகவே, பல பகுப் பாய்வாளர்கள் பார்க்கின்றனர். ஆனாலும், எல்லையை ஆக்கிரமிப்பதற்கான சிறிய அளவிலான முயற்சி என்று மட்டும் இதனைப் பார்ப்பது போதுமானதல்ல.  எல்லையில் இத்தகைய குழப்பங்கள் இருப்பதற்கு ஆழமான கார ணங்கள் பல உண்டு.  

புவி - அரசியல் காரணிகள்

வழக்கமான எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக ஏற்படும் உரசல்களையும் தாண்டி, இதற்கு ஆழமான புவி அரசியல் காரணிகளும் (geo-political factors) உண்டு. மிகவும் அடிப்படையான அம்சங்கள் உட்பட இந்தியா வுக்கும் சீனாவுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளில் அவநம்பிக்கையும் சந்தேகமும் கணிசமான அளவிற்கு வளர்ந்திருக்கிறது. சீனா என்னதான் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுத்தாலும், அத்தகைய நிலைமை வளர்வதில் இந்திய அரசு எடுத்திடும் நிலைப் பாடுகளுக்கும் பங்கு உண்டு.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இல்லாமல் செய்து ஒழித்துக்கட்டியிருப்பது, அதனை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத் திருப்பது போன்றவை வெளியுறவுகளில் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனா, இதனை தங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து பார்த்தது. சீன அரசாங்கம் இரு தடவை இந்தியாவுக்கு தன் எதிர்ப்பினைத் தெரிவித்தி ருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, ஜம்மு-காஷ்மீர் பகுதியை இவ்வாறு ஒரு நிர்வாக ஏற்பாடாக மாற்றியி ருப்பது, சீனா உரிமை கோரி வரும் பகுதிகளுக்குப்  பாதிப்பு களை ஏற்படுத்தும் என்று கருதுகிறது. இந்திய அரசாங்கம் இதனைக் கவனிக்கத் தவறியது. இப்பிரச்சனையை சீனா, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் அமர்வில் எழுப்பியபோ தும்கூட, இந்திய அரசு அதற்குப் பதிலளிக்கவில்லை.

இப்பிரச்சனை மீது அரசியல் உயர்மட்டத்தில் உள்ள மூத்த அரசாங்கத் தலைவர்களின் செயல்பாடுகளும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 2019 ஆகஸ்ட் 6 அன்று, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதம் நடைபெற்ற சமயத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ இந்த அவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறித்து நான் எப்போது பேசினாலும், அதனுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், அக்சாய் சின்னும் அதன் பாகங்கள் என்பதையும் சேர்த்துத்தான் கூறுகிறேன் என்று, இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று உறுதி படக் கூறியிருந்தார்.

அயல் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2019 செப்டம்பரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் நம் நாட்டின் அதிகாரவரம்பெல்லைக்குள் ஒரு நாள் கொண்டு வரு வோம்” என்று பேசினார். மோடி-2 அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு, சீனாவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் ராணுவ சூழ்ச்சித் திட்டத்துடன் இந்தியா தன்னையும் இணைத்துக்கொள்ள வேகமான முறையில் நடவடிக்கைகள் எடுத்ததையும் பார்த்தோம்.      

சென்ற ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான நான்கு நாடுகளின் கூட்டணி, அதிகாரிகள் என்ற மட்டத்தில் இருந்து அமைச்சர்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டது. அத னைத் தொடர்ந்து இந்நான்கு நாடுகளின் அயல்துறை அமைச்சர்களும் ஐ.நா.மன்றத்தின் பொது அமர்வு நடந்து கொண்டிருந்தபோது நியூயார்க்கில் தனியே சந்தித்துப் பேசினர். இப்போதைய கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும், உலக சுகாதார மன்றத்தில் சீனாவிற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, அமெரிக்காவின் சூழ்ச்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் பங்கெடுத்துக்கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கொரோனா வைரஸ் சீனாவில் ஒரு ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்று அமெரிக்கா கூறும் குற்றச் சாட்டை, மத்திய அமைச்சர் ஒருவரும் எதிரொலித்தார். இவை அனைத்தும் லடாக்கில் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகளுக்கு, பங்களிப்பினைச் செய்திருப்பது போன்றே தோன்றுகிறது.  

சிக்கல்களை மேலும் சிக்கலாக்கி...

லடாக்கின் கிழக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள தவுலத் பெக் ஓல்டிபகுதிக்கு சாலை அமைக்கும் பணியை யும் மற்றும் அதனையொட்டி வடமேற்கில் கிளை சாலைகள் அமைக்கப்படுவதையும்,  இந்தியா தனது எல்லை உள்கட்ட மைப்பு வசதிகளை வளர்ப்பதற்காக சட்டப்பூர்வமான ஒரு பகுதியாகவே மேற்கொண்டுவந்தபோதிலும், இதனை சீனா இப்போது வேறு கோணத்திலேயே பார்க்கிறது. நம்முடைய அண்டை நாடுகளுடன் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஏன் என்று மத்திய அரசு தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். சீனாவுடனும், பாகிஸ்தானு டனும் சிக்கலான எல்லைத் தாவாக்கள்  இருப்பதுடன், இப்போது நேபாளமும் காலாபாணி பகுதி குறித்து தாவாவை எழுப்பி இருக்கிறது. வங்கதேச ‘ஊடுருவல்காரர்களுக்கு’  எதி ராகவும், அங்கிருந்து வந்த “கரையான்களை”  மீண்டும் அங்கே அனுப்புவதற்காகவுமே குடியுரிமைத் திருத்தச்சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவை   கொண்டு வரப் பட்டது என்று ஆட்சியாளர்கள் தரப்பில் தொடர்ந்து கூறப் பட்டுவருவதும், இதுவரை நட்பு நாடாக இருந்துவரும் வங்க தேசத்தையும்கூட நமக்கு எதிரான அதிருப்தியை அதிகப் படுத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இவை அனைத்தையும் சீனாவால் ஏவப்பட்ட சூழ்ச்சிகள் என்று கூறி தள்ளுபடி செய்வது சுய மாயையாகும். உண்மை என்னவெனில், ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அதிதீவிர இந்துத் துவா தேசியவாத உலகக் கண்ணோட்டம் (ultra-nation alist Hindutva world view), தெற்காசிய நாடுகளுடனான நம் உறவுகளை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது.

இந்தியா, இப்போது ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வழி காண வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சீனாவுடன் நீண்டகாலமாக இருந்துவரும் இதர பிரச்சனைகள் குறித்தும் தீர்வு காண்பதற்கான பாதை யையும் வகுத்திட வேண்டும். இதனை உயர்மட்ட அளவி லான அரசியல் மற்றும் ராஜீய ரீதியிலான தலையீட்டின் மூலமாக மட்டுமே செய்திட முடியும்.

எம்.கே.நாராயணன் கூற்று

இதற்கு, சீனாவுடன் நம்முடைய நீண்டகால ராணுவ உத்தி சார்ந்த அணுகுமுறை மறுகட்டமைப்பு செய்யப்படு வது தேவை. நமது நலன்கள் சிறந்தமுறையில் பாதுகாக்கப் பட வேண்டும் என்று இந்தியா நினைத்தால், அது அமெரிக்க-சீன மோதலில் அணிசேரா நிலைப்பாட்டையே (non-aligned posture) பின்பற்றிட வேண்டும் என்று தேசிய நாளிதழ் ஒன்றில் தேசியப் பாதுகாப்பு முன்னாள் ஆலோசக ராக இருந்தவரும், பாதுகாப்பு அம்சங்களில் அனுபவமிக்க வல்லுநருமான எம்.கே. நாராயணன் சமீபத்திய தனது கட்டுரையில் எழுதியிருந்தார். மேற்கத்திய ஆதரவு வல்லு நர்களும், மேற்கத்திய நாடுகளுக்குத் துதிபாடுபவர்களும் கூறிடும் கூற்றுகளுக்கு முற்றிலும் மாறாக இவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.  அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் சூழ்ச்சியிலும் அதன் ராணுவ மற்றும் போர்சூழ்ச்சி உறவுக ளிலும் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டிருக் கும் மோடி அரசாங்கம்,  சீனாவிற்கு எதிரான கூட்டத்துடன் இருப்பது, நம் நாட்டின் நலன்களுக்குப் பலனளிக்குமா என்பதைப் பரிசீலனை செய்திட வேண்டும்.

இந்தியா, சீனாவுடன் சமமான நிலையில்;  அதே வேளை சொந்தக்காலில் நின்று பிரச்சனைகளை நெகிழ்வுத்தன்மையுடன் கையாள வேண்டும். இதற்காக நாம் நம் அடிப்படை நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. நாட்டின் நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த நலன்கள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் விதத்தில் எதார்த்த நிலைமைகளை அங்கீகரித்து, செயல்படக்கூடிய ஓர் அரசியல் தலைமை மட்டுமே தேவை.   

(ஜூன் 24, 2020), 
தமிழில்: ச.வீரமணி